கயத்தாறு அருகே 13 வயது சிறுமி உள்ளிட்டோர் மீது தாக்குதல் என புகார்! 4 பேர் மருத்துவமனையில் அனுமதி – எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட 100-க்கும் மேற்பட்டோர்

கயத்தாறு அருகே 13 வயது சிறுமி உள்ளிட்டோர் மீது தாக்குதல் என புகார்! 4 பேர் மருத்துவமனையில் அனுமதி – எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட 100-க்கும் மேற்பட்டோர்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அரசங்குளம் கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே தொடர்ந்து பிரச்சினை நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், 13 வயது சிறுமி, பெண்கள் உள்ளிட்ட பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதில் காயமடைந்த 4 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தங்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

கயத்தாறு அருகே உள்ள அரசங்குளம் கிராமத்தில் சைவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 15 குடும்பங்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அதே பகுதியில் யாதவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருவதாகவும், இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, அரசங்குளத்தைச் சேர்ந்த சைவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது இடத்தை அளவீடு செய்வதற்காக அரசு சர்வேயர் ஒருவர் வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவரை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் தாக்கி விரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின்போது, கிராமத்தில் குறைவாக வசிக்கும் சைவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்களின் வீடுகளுக்குள் பட்டாசுகளை வீசியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து, அரசங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் ஏற்கனவே புகார் அளித்ததாக தெரிவிக்கின்றனர்.

ஆனால், தங்களது புகார்கள் தொடர்பாக போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலை அரசங்குளம் கிராமத்தைச் சேர்ந்த குப்பமுத்து என்பவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சுமார் 25-க்கும் மேற்பட்டோர் அவரை கட்டை உள்ளிட்ட பொருட்களால் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பமுத்துவை காப்பாற்ற முயன்ற மூதாட்டி ராஜம்மாள், முத்து கருப்பசாமி மற்றும் 13 வயது சிறுமி முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், “இந்த கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும்; இங்கு நாங்கள் மட்டுமே வசிப்போம்” எனக் கூறி மிரட்டியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்ததாக கூறப்படும் குப்பமுத்து, ராஜம்மாள், முத்து கருப்பசாமி மற்றும் முத்துலட்சுமி ஆகிய 4 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சைவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த அரசங்குளம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் வீரத்தமிழர் மக்கள் கழகம் சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

தொடர்ந்து தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டப்படும் நபர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் அரசங்குளம் பகுதியில் நிரந்தரமாக காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தங்களது கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்த விவகாரத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்று பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் தகவல்கள் மற்றும் விசாரணையின் முடிவுகள் வெளியாகும்போது மட்டுமே தாக்குதல் தொடர்பான முழுமையான உண்மை நிலவரம் தெரியவரும்.

பேட்டி:

பந்தல் ராஜா, மாநில பொதுச் செயலாளர், வீரத்தமிழர் மக்கள் கழகம்.

Tutyvision Online – தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிய எங்களை பின்தொடருங்கள்.