திருச்செந்தூர் அருகே மாதவன் குறிச்சி பகுதி மக்களின் பொது பாதையை மீட்டு தரக்கோரி 50க்கும் மேற்பட்ட முறை மனு அளித்தும் பலன் இல்லை, முதலமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் என தமாக நிர்வாகி பரபரப்பு பேட்டி..!

திருச்செந்தூர் அருகே மாதவன் குறிச்சி பகுதி மக்களின் பொது பாதையை மீட்டு தரக்கோரி 50க்கும் மேற்பட்ட முறை மனு அளித்தும் பலன் இல்லை, முதலமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் என தமாக நிர்வாகி பரபரப்பு பேட்டி..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதை தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒரு கிராமமே பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மால் முருகன் குற்றம்சாட்டியுள்ளார் .

மாதவன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மால் முருகன், பொதுப்பாதையை மீட்டுத் தரக்கோரி கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் , வருவாய்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து வருவதாகவும், இதுவரை 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை, என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மால் முருகன் கூறியதாவது:

மாதவன்குறிச்சி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை சிலர் அடைத்து வைத்துள்ளார், இதனால் ஒரு ஊருக்கே பாதை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை நாடினேன்

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் உத்தரவு பெறப்பட்டுள்ளது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிலைமையை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் (RDO) பொதுப்பாதை தொடர்பாக உத்தரவு பிறப்பித்ததாகவும், அந்த உத்தரவு வட்டாட்சியருக்கு அனுப்பப்பட்ட பின்னரும் நடவடிக்கை தாமதமாகி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு வட்டாட்சியர், RDO, DRO அலுவலகங்களுக்கும் தொடர்ந்து சென்று பொதுப்பாதையை மீட்டுத் தரக்கோரி போராடி வருகிறேன், அதிகாரிகளின் உத்தரவுகள் அடுத்தடுத்த அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதால் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. 

இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பொதுப்பாதை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும், திருச்செந்தூர் பகுதியில் உடன்குடி அனல்மின் நிலையம், இஸ்ரோ உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்களின் செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அவசர காலங்களில் வாகனங்கள் செல்வதற்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதமின்றி நேரில் ஆய்வு செய்து, பொதுப்பாதையில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்றி, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பாதையை மீட்டுத் தர வேண்டும் , தமிழக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மால் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

“50-க்கும் மேற்பட்ட மனுக்கள்… 6 ஆண்டுகளாக போராட்டம்… இனியும் தாமதம் வேண்டாம்; பொதுப்பாதையை மீட்டுத் தர வேண்டும்” என்பதே மாதவன்குறிச்சி கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.