தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 1 தேர்வை 4655 பேர் எழுதினர் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 1 தேர்வை 4655 பேர் எழுதினர் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குரூப் 1 மற்றும் 1 A தேர்வை 4655 தேர்வர்கள் எழுதினர் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தூத்துக்குடி விக்டோரியா சி.பி.எஸ்.சி பள்ளி, எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மற்றும் கிங் ஆப் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வுகளான குரூப் 1 மற்றும் 1 A தேர்வினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் மூலமாக ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வுகளான குரூப் 1 மற்றும் 1 A -வில் துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தொழிலாளர் உதவி ஆணையர், உதவி வனபாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு பணியிடங்களுக்கான தேர்வு தூத்துக்குடியில் விக்டோரியா சி.பி.எஸ்.சி பள்ளி, எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கிங் ஆப் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் வ.உ.சி கல்லூரி என மொத்தம் 22 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.

இம்மையங்களில் 5952 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இன்று நடைபெற்ற தேர்வில் 4655 (78 சதவீதம்) பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 22 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 04 மொபைல் குழுக்களும் பணி மேற்கொண்டனர். மேலும், தேர்வு மையங்களில் தேர்வினை கண்காணிப்பதற்கு 2 அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்களும் வருகைதந்துள்ளனர்.

தேர்வு எழுத வருகின்ற தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்றடைவதற்கு ஏதுவாக அரசு போக்குவரத்துக்குக் கழகத்தின் மூலம் உரிய வழித்தடங்களில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டது. 

தேர்வு மையங்களில் இருக்கைகள், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளும், தீயணைப்பு துறையின் மூலம் மாவட்ட கருவூலத்திற்கு தேவையான தீயணைப்பு வண்டிகள் நிறுத்துவதற்கும் மற்றும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தேர்வர்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் அளிக்கும் வகையில் 2 ஆம்புலன்ஸ் வசதிகளும் மருத்துவத் துறையின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. 

தேர்வு மையங்களில் தேர்வு எழுதக்கூடிய மாற்றுத்திறனாளிகள் இருப்பின் அவர்களை அந்தந்த தேர்வு மையத்தின் தரைத்தளத்தில் இருக்கை ஒதுக்கீடு செய்து தேர்வு எழுத உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு நடைபெறும் நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது , தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.