முத்தையாபுரம் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவலரை நியமிக்க வாலிபர் சங்கம் கோரிக்கை!!

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே உள்ள உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் காலை மற்றும் மாலை நேரத்தில் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகிறது. இதில் துறைமுகம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை, தூத்துக்குடி - திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கின்றன.
மேலும் இந்த பிரதான ரவுண்டானா பகுதியைத்தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தூத்துக்குடி நகரத்திற்கு வேலைக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலர் பயன்படுத்துகின்றனர். ஆகையால் விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்னர் உடனடியாக மாவட்ட காவல்துறை நிர்வாகம் ஒரு போக்குவரத்து காவலரை பணியமர்த்தி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.