தூத்துக்குடி மாவட்டத்தில் 132 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப உள்ளதாக: ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் 132 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப உள்ளதாக: ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள்  நேரடி பணிநியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், தூத்துக்குடி மாவட்ட திட்ட அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 13 வட்டாரங்களில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 88 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 44 அங்கன்வாடி உதவியாளர்களின் காலிப்பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்கள் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் விண்ணப்பங்கள் 07.04.2025 முதல் 23.04.2025 வரை காலிப்பணியிடங்களுக்கு 10 அலுவலக வேலை நாள்களுக்குள் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) விண்ணப்பிக்க வேண்டும். 

தொகுப்பூதிய விவரம்: 

தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் தொடர்ந்து பன்னிரெண்டு மாத காலம் பணியினை முடித்த பின்பு சிறப்பு கால முறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர்.

ஊதியம் விவரம்  

தொகுப்பூதியம் மாதம் ஒன்றுக்கு  

அங்கன்வாடி பணியாளர் ரூ.7700/- 

குறு அங்கன்வாடி பணியாளர் ரூ. 5700/-

அங்கன்வாடி உதவியாளர் ரூ.4100/-

தகுதிகள்:  

இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 

அங்கன்வாடி பணியாளர் கல்வி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி 

அங்கன்வாடி உதவியாளர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

தமிழ் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அங்கன்வாடி பணியாளர்  பணிக்கு வயது நிர்ணயம்

அறிவிப்பு வெளியிட்ட மாதத்தின் முதல் நாளின் படி கணக்கிடப்பட வேண்டும். 25 வயது முதல் 35 வயது வரை, 

விதவைகள்/ஆதரவற்ற பெண்கள்/எஸ்சி/எஸ்டி வகுப்பினர் : வயது 25 முதல் 40 வயது வரை

மாற்றுத்திறனாளிகளுக்கு : 25 வயது முதல் 38 வயது வரை (35 + 3 = 38) 20 வயது முதல் 40 வயது வரை, 

அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு வயது நிர்ணயம்

அறிவிப்பு வெளியிட்ட மாதத்தின் முதல் நாளின் படி கணக்கிடப்பட வேண்டும். 20 வயது முதல் 40 வயது வரை, 

விதவைகள் / ஆதரவற்ற பெண்கள்/எஸ்சி/எஸ்டி வகுப்பினர் : வயது 20 முதல் 45 வயது வரை

மாற்றுத்திறனாளிகளுக்கு: 20 வயது முதல் 43 வயது வரை (40+3=43)

தூரச்சுற்றளவு காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவர். அதே கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பிற கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த கிராம ஊராட்சி எல்லையின் அருகில் உள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 

காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகரப் பஞ்சாயத்துகளில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு அல்லது அருகில் உள்ள வார்டு அல்லது மையம் அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்துகொள்ளும் வார்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 

காலிப்பணியிடங்கள்: 

காலிப்பணியிட விவரங்கள் https://thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களில் விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை /ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self Attested) நகல்கள் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண் (தாய்/தந்தை இறப்பு சான்று) சான்றிதழ்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் (அடையாள அட்டை) நகல்களையும் சுய சான்றொப்பமிட்டு (Self Attested) இணைக்க வேண்டும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Files