தூத்துக்குடியில் ஆக.2ஆம் தேதி மாபெரும் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்!!

தூத்துக்குடியில் ஆக.2ஆம் தேதி மாபெரும் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்!!

தூத்துக்குடியில் "நலம் காக்கும் ஸ்டாலின்" எனும் மாபெரும் மருத்துவ முகாம் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறுகிறது என்று அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் "நலம் காக்கும் ஸ்டாலின் மாபெரும் மருத்துவ முகாம்கள் நடைபெற எனும் திட்டத்தின் கீழ் உள்ளன. அதன்படி, தூத்துக்குடியில் வருகின்ற ஆகஸ்ட் 2 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ”நலம் காக்கும் ஸ்டாலின் "திட்டத்தின் கீழ் மாபெரும் மருத்துவ முகாம் செயின்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை தொடர்பான ஆலோசனைகள், எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை, முட நீக்கியல், மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், இதய நோய் தொடர்பான சிகிச்சைகள், நரம்பியல், தோல் சிகிச்சைகள், பல் மருத்துவம், காசநோய் மற்றும் தொழுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை, பாதங்களை பாதுகாப்போம் பரிசோதனை, கண் சிகிச்சைகள், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், சர்க்கரை மற்றும் நீரழிவு நோய்க்கான சிகிச்சை, சித்த மருத்துவம் ஆகிய மருத்துவ சேவைகள் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

மேலும் ஒன்றிணைந்த உயர்தர மருத்துவ சேவைகள், புறநோயாளிகளுக்கான சிறப்பு ஆலோசனைகள், அனைத்து விதமான மருத்துவ பரிசோதனை முறைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை, மாற்றுத்திறாளிகளுக்கான சான்று அட்டை முதலான மருத்துவ சேவைகளும் ஓரே இடத்தில் பொதுமக்களுக்கு கிடைத்திடும் வகையில் இந்த நலம் காக்கும் ஸ்டாலின் " மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த மாபெரும் மருத்துவ முகாமில் திரளாக கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.