தூத்துக்குடியில் திமுக பிரமுகரின் பைக் எரிப்பு: போலீசார் விசாரணை
தூத்துக்குடியில் திமுக பிரமுகர் பைக் தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்தவர் டேனியல் (44). இவர், மாநகர திமுக மீனவரணி அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி மெட்டில்டா தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். டேனியல் தனது பைக்கை நேற்று முன்தினம் இரவு வீட்டு முன் நிறுத்தியிருந்தார்.
இந்நிலையில், மர்ம நபர்கள் அந்த பைக்குக்கு தீ வைத்துவிட்டு தப்பியுள்ளனர். இதில் பைக் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், வடபாகம் போலீசார் வழக்குப்பதிந்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த சாம்சன், முன் விரோதம் காரணமாக பைக்கை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. அவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.