தூத்துக்குடியில் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு

தூத்துக்குடியில் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு துறைகளின் செயல்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் இன்று (12.06.2026) ஆய்வு செய்தார்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், புத்தகம் வழங்கி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் புதுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு செய்து, வேளாண் உபகரணங்களை விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து அறிவுரை வழங்கினார். 

பின்னர், மதுராகோட்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொருட்களின் இருப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு அச்சகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு மாவட்ட கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தினை பார்வையிட்டு, மாணவர்களிடையே கலந்துரையாடி, குறைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் எட்டையபுரம் கிளையினை ஆய்வு செய்து, மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூபாய் 48 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலையினை வழங்கினார். தொடர்ந்து, சிந்தலக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் சிந்தலக்கரை நியாயவிலைக்கடையினை ஆய்வு மேற்கொண்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் இரா.இராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் / செயலாட்சியர் கோ.காந்திநாதன், தூத்துக்குடி சரகத் துணைப்பதிவாளர் மு.கலையரசி, கோவில்பட்டி சரகத் துணைப்பதிவாளர் இரா.இராமகிருஷ்ணன், துணைப்பதிவாளர் (பொவிதி) அ.சுப்புராஜ் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.