குவைத் தீ விபத்தில் கோவில்பட்டியை சேர்ந்த ஊழியர் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்

குவைத் தீ விபத்தில் கோவில்பட்டியை சேர்ந்த ஊழியர் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மாரியப்பன் மரணம் அடைந்ததால் வானரமுட்டி கிராமம் சோகத்தில் மூழ்கியது.

குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சுமாா் 200 போ் வசித்து வந்தனா். இந்தக் குடியிருப்பின் 6-ஆவது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும்புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் புகை பரவியது.

தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமாா் 49 போ் உயிரிழந்தனா். அவா்களில் 42 போ் இந்தியா்கள் என்று அறியப்படுகிறது. 50-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலானோா் கரும்புகை காரணமாக சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனா். அதேவேளையில், குடியிருப்பில் வசித்த பலா் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். மீட்புப் பணியின்போது 5 தீயணைப்பு வீரா்களும் காயமடைந்தனா்.

மாரியப்பன் மரணம் குறித்த தகவல் அறிந்து அவரது வீட்டிற்கு முன்பு சோகத்தில் அமர்ந்துள்ள உறவினர்கள் மற்றும் கிராம மக்கள்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் 20 முதல் 50 வயது வரையிலான இந்தியா்கள். அவா்கள் தமிழ்நாடு, கேரளம் மற்றும் வட இந்தியாவைச் சோ்ந்தவா்கள் என தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், குவைத் தீ விபத்தில் மாரியப்பன் மரணம் அடைந்ததால் வானரமுட்டி கிராமம் சோகத்தில் மூழ்கியது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், புதன்கிழமை அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாரியப்பனுக்கு தாய் வீரம்மாள்,கற்பக லட்சுமி என்ற மனைவியும்,விமலா(11) என்ற மகளும்,கதிர்நிலவன்(9) என்ற மகனும் உள்ளனர்.

மாரியப்பன் இறந்த தகவல் கேட்டு அவர்கள் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சோகத்தில் மூழ்கினா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வானரமூட்டி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு 15 நாள்கள் விடுமுறையில் வந்துவிட்டு மாரியப்பன் சென்றது குறிப்பிடத்தக்கது.