திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் வழங்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!!

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் வழங்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் வழங்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷகம் வருகிற 7-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு அன்னதானம் வழங்க விரும்பும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கபட்ட இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க வேண்டும்.

அன்னதானம் வழங்க விரும்புவோர் கோரம்பள்ளம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மைத்துறை கட்டிடத்தில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அளித்து உணவு பாதுகாப்பு துறையின் பதிவுச்சான்றிதல் பெற வேண்டும்.

அதற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சான்று நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோர்கள் தங்கள் சார்ந்தவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை நகலுடன் சமர்பிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் அளிக்க வேண்டும். அதுபோல் அனுமதி அளிக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது.

கோவில் வளாக பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் பாதையிலிருந்து 100 மீட்டர் தள்ளி அன்னதானம் வழங்க வேண்டும். மேலும் நோய்தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்ககூடாது. வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்கவேண்டும். உணவு பொருட்கள் தரமானதாகவும், தூய்மைதானதாகவும் மற்றும் கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு அன்னதானம் வழங்கக்கூடாது. உணவு கழிவு பொருட்களை போடுவதற்கு ஏதுவாக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பவர்களே உணவு கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும். அன்னதானம் வழங்குமிடத்தை சுத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும்.மேலும் போதிய வழிக்காட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தொடர்புக்கு 0461-2900669, 9894301986, 9629147886 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.