கடலை மிட்டாய் ஆலையில் எலி எச்சங்கள் கலந்து இருந்த 840 கிலோ மாவு பறிமுதல்!

கடலை மிட்டாய் ஆலையில் எலி எச்சங்கள் கலந்து இருந்த 840 கிலோ மாவு பறிமுதல்!

கோவில்பட்டி கடலைமிட்டாய் ஆலையில் ஆய்வு. எலி எச்சங்களுடன் இருந்த 840 கிலோ மாவு மூட்டைகள் பறிமுதல். சுகாதார குறைபாடுகளினால் நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிக ரத்து செய்து, அதன் இயக்கம் நிறுத்தம் - நியமன அலுவலர் நடவடிக்கை.

சுகாதாரத் துறை செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப, உணவு பாதுகாப்பு ஆணையர் திரு.லால்வேணா, இ.ஆ.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி, இ.ஆ.ப ஆகியோரது கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் மற்றும் கோவில்பட்டி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லப்பாண்டி ஆகியோர், புகார் ஒன்றின் அடிப்படையில், கோவில்பட்டி ஒன்றியத்தில் இருக்கும் ஜெயா ஸ்வீட்ஸ் என்ற கடலைமிட்டாய், மிக்சர் மிட்டாய் மற்றும் எள் மிட்டாய் தயாரிக்கும் ஆலையை ஆய்வு செய்தனர். 

அப்போது, அந்த ஆலையானது மிகவும் சுகாதாரக்கேடுடனும், உரிய கணக்குக்கள், பயிற்சி விபரங்கள் மற்றும் பகுப்பாய்வறிக்கைகள் ஏதுமில்லாமலும் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், எலியின் எச்சங்கள் படர்ந்திருந்த 840 கிலோ கிழங்கு மாவு, பட்டாணி மாவு மற்றும் மைதா கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 100 கிராம் அளவிலான 5000 மிக்சர் மிட்டாய் பாக்கெட்டுகள், 800 கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் உரிய லேபிள் இல்லாத காரணத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மிகுந்த சுகாதாரக் குறைபாடுடன் கடலைமிட்டாய் தயாரிப்பு ஆலை இருந்ததினால், அந்த ஆலையின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை இடைக்காலமாக தற்காலிக ரத்து செய்யப்பட்டு, அந்நிறுவனத்தின் இயக்கத்தினை உடனடியாக நிறுத்திவைக்க நியமன அலுவலர் உத்திரவிட்டுள்ளார்.

கடலைமிட்டாய் தயாரிப்பு ஆலைகளின் உரிமையாளர்களின் கவனத்திற்கு:

1. ஆலை மிகவும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும்.

2. கடலைமிட்டாய் தயாரிப்பு பணி முடிந்து, பொட்டலமிட்டவுடன், அதன் தயாரிப்பு தேதியுடன் கூடிய லேபிள் விபரங்கள் முழுமையாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

3. ⁠பொருள் வைப்பறை மிகவும் சுகாதாரமானதாக, கொறிப்பான்கள் மற்றும் பூச்சிகள் தாக்கம் ஏதுமின்றி இருக்க வேண்டும்.

4. ⁠பணியாளர்கள் அனைவருக்கும் வருடாந்திர மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.

5. ⁠மூல உணவுப் பொருட்கள் மற்றும் தயாரித்த உணவுப் பொருட்களின் கணக்கு விபரத்தினை, நிறுவனத்தினுள் தான் பராமரிக்க வேண்டும்.

விதிமுறைகளைப் பின்பற்றாத கடலைமிட்டாய் தயாரிப்பு ஆலைகளின் உணவு பாதுகாப்பு உரிமம் உடனடியாக இடைக்கால ரத்து செய்யப்பட்டு, அவற்றின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்படும் என்று எச்சரிக்கப்படுகின்றது. பொதுமக்களின் பொது சுகாதார நலன் சார்ந்த விடயத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்படுகின்றது.

மேலும், இது தொடர்பான புகார்கள் ஏதும் நுகர்வோருக்கு இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.