திருச்செந்தூர் கடற்கரையில் பழங்காலத்து கல் சாலை? பக்தர்கள் வியப்பு!

திருச்செந்தூர் கடற்கரையில் பழங்காலத்து கல் சாலை? பக்தர்கள் வியப்பு!

திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கி காணப்படும் நிலையில் வெளியே தெரியும் கல்சாலையை பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்து அதன் மீது நின்று "செல்பி" எடுத்து வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளியே சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது. கடந்த 31-ந்தேதி அமாவாசையாக இருந்ததால் 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் இருப்புபாதை, வினோதம் பாலம் போன்ற கல்சாலைகள் போன்ற அமைப்பு காணப்படுகிறது. அந்த சாலை நீண்ட தூரத்திற்கு காணப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, இது பண்டைய கால மன்னர்கள் ஆட்சி செய்தபோது திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினத்தில் உள்ள துறைமுகத்திற்கு பொருட்கள் ஏற்றிச் செல்ல பயன்படுத்திய சாலை அல்லது ஆங்கிலேயர் காலத்தில் கடற்கரை வழியாக போடப்பட்ட ரயில் இருப்புபாதையாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே மதுரைக்கு தெற்கே பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த போது குலசேகரபட்டிணம் ஒரு துறைமுகமாக இருந்து இங்கிருந்து ஜாவா, சுமத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு முத்து, உப்பு, போன்றவை ஏற்றுமதி செய்ய கப்பல் போக்குவரத்து இருந்துள்ளதாக இந்த பகுதியில் உள்ள கோவில் கல்வெட்டு மூலம் தெரிகிறது.

அதே போல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குலசேகரன்பட்டினத்தில் துறைமுகம் இருந்ததாகவும், இந்த துறைமுகத்திற்கு திருச்செந்தூர் கடற்கரை வழியாக ரயில் பாதை இருந்ததாகவும் அங்கு சீனி ஆலைகள் இருந்ததாகவும் ரயிலில் பொருட்களை ஏற்றி வந்து கப்பல் வழியாக ஏற்றுமதி நடந்துள்ளது என கூறப்படுகிறது. பின்னாளில் கடல் சீற்றம் ஏற்பட்டு ரயில் போக்குவரத்து, துறைமுகம் காணாமல் போயிருக்கலாம் என தெரிகிறது.

அதற்கான தடயங்கள் தான் தற்போது கடல் உள்வாங்கிய போது கடற்கரை வழியாக குலசேகரன்பட்டினந்திற்கு ரயில் பாதை அல்லது சாலையாக இருந்த அடையாளம் அதாவது சாலை போன்று காணப்படுகிறது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த வினோத பாதையை திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்து அதன் மீது நின்று "செல்பி" எடுத்து மகிழ்கின்றனர்.