பதிவு பெறாத முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்லக்கூடாது: ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தல்!

பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லக்கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பவத் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் eMigrate (https://emigrate.gov.in) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும்.
எந்த நிறுவனத்தில் / முதலாளியிடம் வேலை செய்ய இருக்கிறீர்கள் என்பது போன்ற தகவல்களையும் முன்னதாக உறுதி செய்துகொள்வது அவசியமாகும். வேலைக்கான ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும்.
வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம் பெறுகின்றன. வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.
அதேநேரத்தில், பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வெளிநாடு பயணிக்கக்கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது, அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும்.
இது கைது, அபராதம் அல்லது சிறை தண்டனைக்கே வழிவகுக்கும். வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி மையத்தினை தொடர்பு கொள்ளவும்.
nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல், nrtchennai@tn.gov.in, https://nrtamils.tn.gov.in. ஆகிய வலைதளத்தில் ஆய்வு செய்யலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் நபர்கள், குறுக்கு வழிகளை தவிர்த்து, அரசு அமைத்துள்ள சட்டப்பூர்வமான வழியில் செல்லும்போது தான் பாதுகாப்பான வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும். இவவாறு அதில் கூறப்பட்டுள்ளது.