தூத்துக்குடி மாவட்டத்தில் 8 பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் வழங்கினார்!
தூத்துக்குடி மாவட்டத்தில் 8 பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களின் திறமையை மேம்படுத்தும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற ஏற்பாடு செய்யுமாறு ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னெடுப்பின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சி. மதன்(ஆயுதப்படை பொறுப்பு) மேற்பார்வையில் மோட்டார் வாகன பிரிவு காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம் பெற ஆர்வமுள்ள தாலுகா காவல் நிலையம் மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 8 பெண் காவலர்களுக்கு 35 நாட்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி அளித்தனர்.
மேற்படி ஓட்டுநர் பயிற்சியை சிறப்பாக மேற்கொண்ட 8 பெண் காவல்துறையினர் தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் ஓட்டுனர் உரிமம் பெற்றனர். மேற்படி 8 பெண் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (10.12.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து ஓட்டுனர் உரிமம் வழங்கி வாழ்த்து தெரிவித்தும் அவர்கள் இயக்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்களை கொடியைசைத்தும் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மற்றும் மோட்டார் வாகன பிரிவு காவல்துறையினர் உடனிருந்தனர்.