அமைச்சர், எம்பியை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!
திருச்செந்தூர் அமலில் நகரில் அமைச்சர், எம்பியை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

திருச்செந்தூர் அமலில் நகரில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி 4 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது காற்றின் வேகம் காரணமாக படகு கவிழ்ந்தது. இதில் அஸ்வின் (32), பிரசாத் (42) ஆகிய மீனவர்கள் மாயமாகினர். இதனையடுத்து மாயமான மீனவர்களின் மனைவிக்கு அரசு வேலை தருவதாக மாவட்ட கலெக்டர் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீனவர்கள் மாயமாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் வாழ்வாதமின்றி தவித்து வருவ தாகவும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை உடனடியாக வழங்க கோரியும், அமலிநகரில் மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 200 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போராட்டம் குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், "அமலி நகர் மீனவ கிராமத்தில் இரண்டு மீனவர்கள் கடலில் தவறி இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை கண்டித்தும், உடனடியாக அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தனர்.