ஆரம்பமே சொதப்பல்.. விஜய் எதிர்பார்க்கல.. 2வது நாளும் முடங்கிய செயலி.. திணறுது தமிழக வெற்றிக் கழகம்?

ஆரம்பமே சொதப்பல்.. விஜய் எதிர்பார்க்கல.. 2வது நாளும் முடங்கிய செயலி.. திணறுது தமிழக வெற்றிக் கழகம்?

 தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேருவதற்கான உறுப்பினர் சேர்க்கை செயலியில், ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றனர்.. இதனால், செயலி திடீரென முடங்கிவிட்டது. இன்று 2 வது நாளாகவும் செயலி முடங்கியிருப்பது, விஜய் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை விஜய் தொடங்கியிருக்கிறார். இந்த கட்சிக்கு மாநில வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.. இதையடுத்து, தமிழகம் முழுவதும் 2 கோடி பேரை கட்சியின் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பது, நோக்கமாக முடிவெடுக்கப்பட்டது.

2 கோடி உறுப்பினர்கள்: 2 கோடி பேர் இலக்கு என்பதால், இதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என்று ஆராயப்பட்டன.. அதன்படி, இது தொடர்பாக நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், சிறப்பு செயலி மூலமாக இந்த உறுப்பினர் சேர்க்கையை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தமிழக வெற்றிக்கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு செயலி மூலம், உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்துவது என்றும், மாவட்ட மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை: அதன்படி, உறுப்பினர் சேர்க்கைக்காக வாட்ஸ்அப், டெலிகிராம், இணைய பயனாளர்களுக்கென தனித்தனியாக "க்யூஆர்" குறியீடு அறிமுகம் செய்து, அதன்மூலம் செயலியைப் பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்குவது என்றும் முடிவானது. இப்போதைக்கு தேர்தலில் போட்டியில்லை என்றாலும், 2 கோடி உறுப்பினர்கள் மட்டுமே முதல் இலக்கு என்று முடிவு செய்துள்ளதால், தமிழக வெற்றி கழகத்திற்கு செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நேற்று ஆரம்பமாயின.. கட்சி தலைவர் விஜய் இந்த செயலியை தொடங்கிவைத்து, முதல் உறுப்பினராகவும் இணைந்தார். தன்னுடைய போட்டோ, பெயர், முகவரி, போன் நம்பர் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்ட விஜய், அந்த கட்சியின் முதல் உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்.

வேண்டுகோள்: அப்போது, இது தொடர்பாக, வீடியோ ஒன்றையும் விஜய் வெளியிட்டு, "விருப்பப்பட்டால் இதில் இணையுங்கள்" என்று பொதுமக்களுக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தார். எனவே, இந்த செயலி ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றனர்.. உறுப்பினர் அட்டையை பெறுவதற்காக, தமிழகம் உள்பட பிற மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஒரே நேரத்தில் க்யூஆர் குறியீடைப் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதனால், அறிமுகம் செய்யப்பட்ட ஒருசில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செயலி முடங்கிவிட்டது.

முடக்கம் : வாட்ஸ்அப், டெலிகிராம் செயலி என அனைத்து தளங்களுமே முடங்கியது. இது அக்கட்சியினரிடைய பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு, சில மணி நேரம் கழித்து அனைத்து தளங்களும் பயன்பாட்டுக்கு வந்ததாக சொல்லப்பட்டாலும், இன்று 2வது நாளாக செயலி முடங்கியே இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்க உள்ளதாகவும், தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ள நிலையில், திடீரென இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏமாற்றம்: அதுமட்டுமல்ல, புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நேரத்தில், செயலி ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே, முடங்கியிருப்பது, மிகுந்த ஏமாற்றத்தையும், எப்போது செயலி சீராகும் என்ற எதிர்பார்ப்பையும் விஜய் ரசிகர்களிடம் ஏற்படுத்தி வருகிறது.