5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11 நாட்கள் நடைபெறவுள்ள 127வது மலர் கண்காட்சியை 15ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும், இந்தக் கண்காட்சியைப் முதலமைச்சர் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையிலிருந்து கோவை சென்று, அங்கிருந்து உதகைக்கு பயணம் மேற்கொண்டார். தற்பொழுது, மேட்டுப்பாளையம் வழியாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்தப் பயணத்தின் மற்றொரு முக்கிய அம்சம், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களை சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின் போது, அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவது குறித்து விவாதிக்கப்படலாம்.
பொதுமக்களுக்கு பட்டாக்கள் வழங்கி, தொட்டபெட்டாவில் உள்ள பழங்குடியின மக்களை சந்தித்தும் உரையாட உள்ளார். இது தவிர, முதலமைச்சர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உள்ளூர் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குதல் அல்லது மதிப்பாய்வு செய்தல், மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனைகள் நடத்துதல் ஆகியவை அடங்கலாம்.