தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர இலாபம் ரூ. 1,029 கோடியாக உயர்வு!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர இலாபம் முன் எப்போதையும் விட அதிகபட்சமாக ரூ.1029 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர இலாபம் முன் எப்போதையும் விட அதிகபட்சமாக ரூ.1029 கோடியாக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருடங்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கியானது 530 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தனது 4 விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.
இன்று மும்பையில் நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில், தணிக்கை செய்யப்பட்ட காலாண்டு மற்றும் 31.03.2023 அன்று நிறைவு பெறும் நிதி ஆண்டின் நிதி நிலை முடிவுகள், அங்கீகரிக்கப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். தலைமை நிதி அதிகாரி, பொதுமேலாளர்கள், மற்றும் வங்கியின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
வங்கியின் மொத்த வைப்புநிதி ரூ. 47,766 கோடியாக உயர்ந்துள்ளது. (கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.44,933 கோடியாக இருந்தது). வங்கியின் மொத்த கடன் தொகை ரூ. 37,582 கோடியாக உயர்ந்து, 11.36 % வளர்ச்சியடைந்துள்ளது. செயல்பாட்டு இலாபம் 31.03.2023 அன்று ரூ. 1,573 கோடியாக உயர்ந்துள்ளது. இது 31.03.2022 அன்று முடிவடைந்த கடந்த ஆண்டில் ரூ. 1,516 கோடியாக இருந்தது. நிகர இலாபம் 31.03.2023 அன்று ரூ. 1,029 கோடியாக உயர்ந்துள்ளது. இது 31.03.2022 அன்று முடிவடைந்த கடந்த ஆண்டின் ரூ.822 கோடிகளில் இருந்து, 25.18 % வளர்ச்சியடைந்துள்ளது.
நிகர வட்டி வருமானம் 31.03.2023 அன்று 15.37 % வளர்ச்சியடைந்து ரூ. 2094 கோடியாக உயர்ந்துள்ளது (31.03.2022 அன்று ரூ. 1815 கோடியாக இருந்தது) சொத்துக்கள் மீதான வருமான விகிதம் (Return on Asset) 1.97 சதவிகிதமாகவும், பங்குகளின் மீதான வருமான விகிதம் (Return on Equity) 16.78 சதவிகிதமாகவும் உள்ளது. (கடந்த ஆண்டு முறையே 1.66% மற்றும் 16.58 % சதவிகிதமாகும்) வங்கியின் நிகர மதிப்பு (Net worth) ரூ. 5,336 கோடி, 29.84 சதவிகிதம் வளர்ச்சியடைந்து ரூ. 6,928 கோடியாக உயர்ந்துள்ளது.
மொத்த வராக்கடன், வங்கியின் மொத்த கடன் தொகையில் 1.39 சதவிகிதமாகவும், நிகர வராக்கடன் 0.62 சதவிகிதமாகவும் உள்ளது. (கடந்த ஆண்டு, முறையே 1.69 % மற்றும் 0.95 % ஆகும்). வங்கியின் வழங்கல் கவரேஜ் விகிதம் (Provision Coverage Ratio) 90.90% ஆக உயர்ந்துள்ளது (கடந்த ஆண்டு 87.92 % ஆகும்)
2022-23 காலாண்டில், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு முந்தைய காலாண்டை விட 6.88% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிதியாண்டில் (2022-23), 21 புதிய கிளைகள் துவங்கப்பட்டன. மேலும், 2023-24 ஆம் நிதியாண்டில் இன்னும் 50 புதிய கிளைகளைத் துவக்கத் திட்டமிட்டுள்ளோம். காப்பீடு திட்டங்களை வணிகப்படுத்த, மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், சோழா எம் எஸ் பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் கோடக் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் பரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வங்கியானது, 2023-24 நிதியாண்டில் டிஜிட்டல் மற்றும் வணிக செயல்முறை மறுசீரமைப்பு போன்ற நவீன முயற்சிகளில் களமிறங்குகிறது என வங்கியின் அதிகாரிகள் தெரிவித்தனர்.