தூத்துக்குடி: ‘தவெக-க்கு உழைத்ததற்குக் கிடைத்த பரிசு இதுதானா?’ – கூட்டு பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் பேட்டி; புதிய குற்றச்சாட்டுகளால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், தமக்கு தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எம்எல்ஏ மீது காவல்துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராதிகா மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

வழக்கின் பின்னணி

ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இளம் பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக வெற்றிக்கழகத்தின் மேற்கு பகுதி துணைச் செயலாளராக செயல்பட்டு வந்ததாகவும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏவாக உள்ள சரவணனின் வெற்றிக்காக பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மே 3-ஆம் தேதி வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பாலமுருகன் (பாலா) மற்றும் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் ஆகியோர், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் மற்றொரு பெண்ணை காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, ஏர்வாடி அருகே உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராதிகா குற்றச்சாட்டு

செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராதிகா, "பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். கைது செய்யப்பட்ட இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும், இந்த வழக்கில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்எல்ஏ மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.

மேலும், "தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாரை வாபஸ் பெறுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதையும் காவல்துறை கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் ராதிகா கவலை தெரிவித்தார்.

"கடந்த ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. திருச்சியில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் 7 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

போதைப்பொருள் மற்றும் மது பழக்கம் பல குற்றங்களுக்கு காரணமாக உள்ளது. தேர்தலின் போது 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பல இடங்களில் இன்னும் கடைகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டு

பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய தினம் வேலை வாங்கித் தருவதாக கூறி பாலமுருகன் மற்றும் ஜெயபால் என்னை காரில் அழைத்துச் சென்றனர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஏர்வாடி அருகே உள்ள தனியார் விடுதியில் வைத்து இருவரும் என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த விஷயத்தை வெளியே கூறினால் தமிழக முதல்வர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று கூறி புகார் அளிக்கக்கூடாது என மிரட்டினர்" என்றார்.

மேலும், "நான் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்படும் போது கேரளாவில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணனுக்கு சொந்தமான இடத்தில் இருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு?

"இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜயை நேரில் சந்தித்து புகார் அளிக்க முயன்றபோது காவல்துறையினர் என்னை தடுத்தனர். மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா மற்றும் புசி ஆனந்த் ஆகியோரிடமும் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றும் அவர் கூறினார்.

எம்எல்ஏ மற்றும் ஆதரவாளர்கள் மிரட்டல்?

"புகாரை வாபஸ் பெறுமாறு ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். எனது குடும்பத்தை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகின்றனர்.

மேலும் காவல்துறையில் புகார் அளிக்கும் போது எம்எல்ஏ குறித்து குறிப்பிட்டபோது, 'அவர் சட்டமன்ற உறுப்பினர்; அவர் மீது புகார் அளிக்கக்கூடாது' என்று சில காவல்துறையினர் கூறியதாகவும்" பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டினார்.

மற்றொரு பெண்ணும் பாதிப்பு?

இந்த சம்பவத்தில் தன்னுடன் வந்த மற்றொரு பெண்ணுக்கும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலமுருகன் மற்றும் ஜெயபால் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த பெண் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

தவெக தந்த பரிசு..?

மாற்றம் வேண்டும் என்று தான் தமிழக மக்கள் வாக்களித்தார்கள் ஆனால் அந்த மாற்றத்தை நீங்கள் தற்போது பார்த்து வருகிறீர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு உழைத்ததற்காக கிடைத்த கூலி தான் பாலியல் பலாத்காரம் அதுவும் கூட்டு பாலியல் பலாத்காரம் புகார் மனு மீதும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை தமிழக வெற்றி கழகம் சார்பில் என்னை அழைத்தும் இதுவரை எதுவும் கேட்கவில்லை அதற்காக தமிழக முதல்வர் விஜய் அண்ணா அவர்களுக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்னுடைய தலைவனை தேர்ந்தெடுத்ததற்கு தலை வணங்குகிறேன்

 

எம் எல் ஏ பெயரைச் சொல்லி ஒருவர் கூட்டி சென்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அதற்கு அரசும் துணை போகிறது காவல்துறையும் துணை போகிறது பாதிக்கப்பட்ட நான் அசிங்கப்பட்டு கேவலப்பட்டு எதில் தொங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் இதுதான் நான் தமிழக வெற்றி கழகத்தில் இருந்ததற்கான கூலி என்ன பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க பேட்டி அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கட்சியில் இருந்து நீக்கம்

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்ததைத் தொடர்ந்து தன்னை தமிழக வெற்றிக்கழகத்திலிருந்து நீக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க அளித்த இந்த பேட்டி தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றவர்கள்

இந்த செய்தியாளர் சந்திப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராதிகா, மத்தியக்குழு உறுப்பினர் ஆர். சசிகலா, மாநில செயலாளர் பி. பூமயில், தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் ஆர். இனிதா மற்றும் பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறிப்பு: இச்செய்தியில் இடம்பெறும் தகவல்கள் செய்தியாளர் சந்திப்பில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரின் பதில் மற்றும் காவல்துறை விசாரணை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது.