திருச்செந்தூர் கடலில் மூழ்கி தூத்துக்குடி வாலிபர் பலி..!

திருச்செந்தூர் கடலில் மூழ்கி தூத்துக்குடி வாலிபர் பலி..!

திருச்செந்தூர் கோவில் விசாகத்திற்காக சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் தமிழகம் உட்பட பல்வேறு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக் கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரம், வடக்கு தெரு, முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆத்தியப்பன் மகன் செல்வகனி (26) இவர் இன்று காலை நண்பர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கடலில் குளித்த அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். 

இதையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேற்படி உயிரிழந்த செல்வக்கணி சமீபத்தில் நடைபெற்ற பாடி பில்டர் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார். அதேபோல் மாநில அளவில் நான்காவது இடத்தையும் பெற்றார். இந்நிலையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.