தூத்துக்குடியில் ரூ.80 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 11 பேரிடம் விசாரணை!

தூத்துக்குடியில் ரூ.80 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 11 பேரிடம் விசாரணை!

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு ரூ.80 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 11 பேரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

துாத்துக்குடி - மாலத்தீவு இடையே தோணி என அழைக்கப்படும் சிறிய ரக கப்பல் மூலம் கட்டுமானப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் துாத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து கடந்த 4-ந்தேதி மாலத்தீவு புறப்பட்டுச் சென்ற ஒரு கப்பலில் போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இந்திய கடலோர காவல்படை உதவியுடன் அந்த கப்பலை நடுக்கடலில் மறித்த அதிகாரிகள், அதனை தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு திருப்பி கொண்டு வந்து சோதனை நடத்தினர். அப்போது அதில் ஹசீஸ் என அழைக்கப்படும் செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணை போதைப் பொருள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு 30 கிலோ மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.80 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

துறைமுக ஊழியர் சிக்கினார்

இதுதொடர்பாக கப்பலில் இருந்த இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் உள்பட 9 பேரிடமும், கடத்தலுக்கு உதவிய 2 பேரிடமும் என 11 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவத்திற்கு பழைய துறைமுகத்தில் பணிபுரியும் ஒருவர் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த ஜனவரியில் போதைப் பொருட்கள் கடத்தியதாக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் உள்பட 4 பேரை மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து இருந்தனர். எனவே இந்த கடத்தலின் பின்னணி குறித்தும், இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.