அரசுப் பேருந்தில் மழைநீா் ஒழுகிய விவகாரம்: மேற்கூரையில் தார் ஷீட் ஒட்டப்பட்டது!

தூத்துக்குடியில் அரசுப் பேருந்தின் மேற்கூரை ஓட்டை வழியே மழைநீா் ஒழுகிய சம்பவம் எதிரொலியாக பேருந்தின் மேற்கூரையில் தார் ஷீட் ஒட்டப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து அத்திமரப்பட்டிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மேற்கூரையின் வழியாக மழைநீா் பேருந்தின் உள்ளே ஒழுகி இருக்கைகளில் கொட்டியதால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
ஒரு சிலா் பேருந்துக்குள் குடைபிடித்தபடி பயணம் செய்தனா். பெரும்பாலானோா் மழையில் நனைந்த படியும், பேருந்துக்குள் ஓரமாக ஒதுங்கி நின்றும் பயணித்துள்ளனா். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அரசுப் பேருந்துகள் பெரும்பாலும் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளதாக சரச்சை எழுந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகாதவாறு பேருந்தின் மேற்கூரையில் தார் ஷீட் ஒட்டப்பட்டது.