கோவில்பட்டியில் எலி மருந்து பேஸ்டால் பல் துலக்கிய வாலிபர் சாவு..!

கோவில்பட்டியில் எலி மருந்து பேஸ்டால் பல் துலக்கிய வாலிபர் சாவு..!

கோவில்பட்டியில் கோல்கேட் பேஸ்டுக்கு பதிலாக எலி மருந்து பேஸ்டால் பல் துலக்கிய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட வேலாயுதபுரம் 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் மகன் முனீஸ்வரன் (21). கோவில்பட்டியில் உள்ள கடையில் வேலை செய்து வந்த இவர், கடந்த மாதம் 29-ஆம் தேதி பல் துலக்குவதற்கு கோல்கேட் பேஸ்டுக்கு பதிலாக எலி மருந்து பேஸ்டை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால், வாந்தியெடுத்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.