சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், வெளியே சொல்லக்கூடாது என மிரட்டிய ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர் அருகே மேலபள்ளிபத்து பகுதியை சேர்ந்தவர் அரிச்சந்திரன் (43). ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 24-ந் தேதி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த உறவினரின் 14 வயது சிறுமியை கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியுள்ளார். 

உடனடியாக அரிச்சந்திரன் அந்த சிறுமியை மிரட்டிவிட்டு, வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டாராம். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பயந்து போய் வெளியே சொல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பள்ளி விடுமுறைக்கு தனது பாட்டி வீட்டுக்கு சிறுமி சென்றுள்ளார். விடுமுறை முடிந்து கடந்த 1-ந் தேதி ஊருக்கு திரும்பியுள்ளார். கடந்த ஜூன் 8-ந் தேதி காலையில் மேலப்பள்ளிபத்து பஸ் நிறுத்தத்தில் சிறுமி நின்றுள்ளார். 

அப்போது அங்கு வந்த அரிச்சந்திரன், பாலியல் தொல்லை குறித்து வெளியே சொல்லக்கூடாது என மீண்டும் சிறுமியை மிரட்டிவிட்டு சென்றாராம். இதை தொடர்ந்து அந்த சிறுமி பெற்றோரிடம், உறவினரின் பாலியல் தொல்லை, மிரட்டல் குறித்து தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியுடன் சென்று திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து அந்த போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரிச்சந்திரனை கைது செய்தனர்.