தூத்துக்குடி லாட்ஜில் மேற்கு வங்க நபர் தற்கொலை : போலீஸ் விசாரணை!

தூத்துக்குடி லாட்ஜில் தங்கியிருந்த மேற்கு வங்க நபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கோபால்தாஸ் லாடியா மகன் சஞ்சவு லாடியா (55), இவர் தூத்துக்குடி குருஸ் பர்னாந்து சிலை அருகிலுள்ள ஒரு லாட்ஜில் கடந்த 11 நாட்களாக தங்கி இருந்து ரயில்வேயில் உயர் அழுத்த மின்சார லைன் வேலை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். நேற்று இரவு லாட்ஜ் அறையில் தூங்கினார்.
இந்த நிலையில், இன்று காலை வெகு நேரம் ஆகியும் இவரது கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் மேனேஜர் மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரத உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இது சம்பந்தமாக மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.