தூத்துக்குடியில் போதை தரக்கூடிய ஊசிகளை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது - 800 போதை ஊசிகள் பறிமுதல்..!

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை தரக்கூடிய ஊசிகளை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது - 800 போதை ஊசிகள் மற்றும் ரூபாய் 11,300/- ரொக்க பணம், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருளப்பன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. முத்துராஜா மற்றும் போலீசார் இன்று (11.06.2025) தாளமுத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் தாளமுத்துநகர் சமர்வியாஸ் நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் செல்வகுமார் (45) மற்றும் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் ரஹீம் (48) ஆகியோர் என்பதும் அவர்கள் Tramadol Hydrochoride injection 50mg/ml என்னும் போதை ஊசிகளை மருந்து சீட்டு இல்லாமல் வெளியூரிலிருந்து சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகள் செல்வகுமார், ரஹீம் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த மேற்படி Tramadol Hydrochoride injection 50mg/ml-800 போதை ஊசிகள், ரூபாய் 11,300/- ரொக்க பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவர் பரிந்துரையின்றி சட்ட விரோதமாக போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் மருந்தக கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.