திருச்செந்தூர் கோவிலில் பிரேக் தரிசனம் விரைவில் அமல் : ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்!

திருச்செந்தூர் கோவிலில் பிரேக் தரிசனம் விரைவில் அமல் : ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்!

தமிழகத்தில் திருச்செந்தூர் உட்பட 3 கோவில்களில் விரைவு (பிரேக்) தரிசன முறை விரைவில் அமலாக உள்ளது. இதன் மூலம் தரிசன நாள், நேரத்தை பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம். 

தமிழகத்தில் புகழ்பெற்ற கோவில்களாக விளங்கும் பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்கள் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழக பக்தர்களுடன் கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் வருவதால் கோவில்களில் எப்போதும் மக்கள் கூட்டமாக இருந்து வருகிறது.

நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் காத்திருப்பு நேரம் அதிகமாகி, சில நேரங்களில் பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு விடுகிறது. இதை தவிர்க்கவும், நீண்ட நேர காத்திருப்புக்கு விடை கொடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை 'பிரேக்' தரிசன முறையை (விரைவு தரிசனம்) கொண்டுவர உள்ளது. இதனால் பக்தர்களின் காத்திருப்பு நேரம் வெகுவாக குறையும்.

முதல்கட்டமாக பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்களிலும், திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலிலும் 'பிரேக்' தரிசன முறை கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்காக ஆன்லைன் மூலம் தரிசன தேதி, நேரத்தை பதிவு செய்யும் பக்தர்கள் கோவில்களில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்ய முடியும்.

இந்த 'பிரேக்' தரிசனம் என்பது கோவில்களில் தனி நுழைவு வாயில்கள் மூலம் குறுகிய காத்திருப்பு நேரத்துடன், முன்னுரிமை விரைவு தரிசனம் செய்வதாகும். 'பிரேக்' தரிசனம் செய்பவர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் பிரசாதம், ஆரத்தி, தீர்த்தம் போன்ற கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.

பழனி கோவிலைப் பொறுத்தவரை, ரூ.300 கட்டணத்தில் பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், திருநீறு, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. திருப்பதியில் இந்த பிரேக் தரிசன முறை நடைமுறையில் இருக்கிறது. அதே முறை இந்த 3 கோவில்களில் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த கோவில்களை தொடர்ந்து ஸ்ரீரங்கம், சமயபுரம் ஆகிய கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.