தூத்துக்குடியில் 3 பேரிடம் என்ஐஏ விசாரணை : காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

சென்னையில் நக்ஸல் அமைப்புடன் தொடர்புடைய நபரை தேசிய புலனாய்வு அமைப்பினர் அண்மையில் கைது செய்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்ததாக தூத்துக்குடியில் தங்கியுள்ள பீகாரைச் சேர்ந்த மூன்று இளைஞர்களிடம் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
தேசிய புலனாய்வு அமைப்பினர் சென்னையில் நக்ஸல், தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை அண்மையில் கைது செய்தனர். அவரது செல்போனை சோதனை செய்ததில், தூத்துக்குடியில் கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்பிக் ஆலம் என்ற இளைஞரின் செல்போன் எண் பதிவாகி இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி வந்த என்ஐஏ அதிகாரிகள், சிலுவைப்பட்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கட்டடத்துக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்ட முஸ்பீக் ஆலத்தைப் பிடித்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் அவர் ஒரு மாதத்துக்கு முன் இப்பணிக்காக வந்திருந்தது தெரியவந்தது. அவர் தங்கியிருந்த அறையில் அவருடன் மொத்தம் 7 பேர் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக தங்கியிருந்ததும், அனைவரும் பிகார் மாநிலம், பூரணியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் அவர்களது அறை, உடைமைகளை சோதனை செய்தனர். பின்னர் முஸ்பீக் ஆலத்தையும், சந்தேகத்துக்குரிய இருவர் என மூன்று பேரைப் பிடித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஒப்படைத்தனர்.