ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம்!
ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் உள்ள குளங்களில் தண்ணீர் இல்லாத நிலையில் வாழைகள் கருகி வருகின்றன. கருகி வரும் வாழைகளை காப்பாற்ற ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பலமுறை மனு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்க படாத நிலையில் விவசாயிகள் தாமிரபரணி வடகால் பாசன சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் புதன் கிழமை காலை ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் தலைமை வகித்தார். போராட்டத்திற்கு விவசாயி சங்க ஏரல் தாலுகா செயலாளர் சுப்புத்துரை முன்னிலை வைத்தார். போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் நம்பிராஜன், மாவட்ட துணைத் தலைவர் தி. சீனிவாசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஐ.கனபதி, திருவைகுண்டம் ஒன்றிய விவசாய சங்க செயலாளர் ராமச்சந்திரன், சேர்வைக்காரன்மடம் விவசாயிகள் சங்க தலைவர் பொன்ராஜ், லட்சுமிபுரம் ராஜாராம், சேர்வைக்காரன் மடம் கிஷோர் குமார், தீப்பாச்சி லட்சுமணன், மாரமங்கலம் முத்துக்குமார், வாழவல்லான் ஒன்றிய கவுன்சிலர் பாரத், கணபதி சமுத்திரம் சீனி ராஜ் மற்றும் 50 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.