தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: 2பேர் கைது!

தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: 2பேர் கைது!

தூத்துக்குடியில் சுமார் 1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் வைத்திருந்த 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கோவில் பிள்ளைவிளை சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜேஷ் (39) மற்றும் பிரான்சிஸ் (22) ஆகியோரை சோதனை செய்ததில் கஞ்சா ஆயில் வைத்திருந்தது தெரியவந்தது. 

உடனடியாக மேற்படி போலீசார் 2 பேரையும் தாளமுத்துநகர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் வழக்கு பதிவுசெய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

மேற்படி துரிதமாக செயல்பட்டு கஞ்சா ஆயில் வைத்திருந்த 2 பேரை கைது செய்தும், சொத்துக்களை பறிமுதல் செய்தும் சிறப்பாக பணியாற்றிய தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.

இதுபோன்று கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு "DrugFreeTN” எனும் செயலியை உருவாக்கியுள்ளது. மேற்படி செயலியின் மூலம் பொதுமக்கள் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை அநாமதேய (anonymous) தயங்காமல் புகார் அளிக்கலாம். மேலும் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துக்கொள்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பழக்கத்தை குறைக்கும் நோக்கத்தோடு, காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.