தூத்துக்குடியில் பால் வியாபாரி வெட்டிக் கொலை : பட்டப்பகலில் பயங்கரம்!

தூத்துக்குடியில் பட்டப்பகலில் பால் வியாபாரி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பண்டாரம்பட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் ஆத்திமுத்து மகன் நந்தகுமார் (30), பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை 11 மணியளவில் வழக்கம்போல் பால் வியாபாரத்தை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மீள விட்டான் ரோடு, பண்டாரம்பட்டி விலக்கு ரோட்டில் வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதையடுத்து அவர் தனது பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரை கொலை செய்த ஆசாமிகள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.