கோவில்பட்டி அருகே. வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை : ஒருவர் கைது

கோவில்பட்டியில் கை குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கை குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வந்த இளம் பெண்ணின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி புகுந்து போதையில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாக பாதிக்கப்பட்ட பெண் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை நடத்தினார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு தடயவியல் மற்றும் கைரேகை பிரிவு அதிகாரிகள் வருகை தந்து தடயங்களை கைப்பற்றினார். மேலும் மோப்பநாய் சுனோ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக வீரவாஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம், மாரியப்பன் ஆகிய இரு இளைஞர்களை போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் வீரவாஞ்சி நகர் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த அவர்களை பிடிக்கச் சென்றபோது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்ததில் மாரியப்பன் கீழே விழுந்து கை கால்களில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து மாரியப்பனை சுற்றி வளைத்த போலீசார் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
சம்பவத்தில் தொடர்புடைய மாரி செல்வம் என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் பத்மாவதி, நவநீத கிருஷ்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.