தூத்துக்குடியில் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மோசடி: 3பேர் கைது!!
திருச்செந்தூரில் ராமர் பட்டாபிஷேக நாணயங்கள் தருவதாக ஏமாற்றி ரூ.1 லட்சத்தை திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூரில் ராமர் பட்டாபிஷேக நாணயங்கள் தருவதாக ஏமாற்றி ரூ.1லட்சத்தை திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முனிசேகர் (34) இவர் காஞ்சிபுரத்தில் உள்ள மூலிகை மருந்து கம்பெனியில் சூப்பர்வைசராக வேலைபார்த்து வருகிறார். இவரிடம், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காமராஜர் புரத்தைச் சேர்ந்த சுடலை மணி மகன் கணேச மூர்த்தி (35) என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு தன்னிடம் ராமர் பட்டாபிஷேக நாணயங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், ரூ.1லட்சம் கொடுத்தால் நாணங்களை தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த நாணயங்களை வாங்குவதற்காக முனிசேகர் ஆறுமுகநேரிக்கு வந்துள்ளார். அங்குள்ள லாட்ஜில் வைத்து அவரிடம் கணேசமூர்த்தி மற்றும் பேயன்விளை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செந்தில் (36), லிங்கதுரை மகன் முனி (28) ஆகியோர் பேரம் பேசியுள்ளனர். அப்போது முனிசேகர் பாத்ரூம் சென்றிருந்த வேளையில் அவர் பேக்கில் வைத்திருந்த ரூ.1லட்சம் பணத்தை மூவரும் திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முனிசேகர் திருச்செந்தூர் தாலூகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி கணேசமூர்த்தி உள்ளிட்ட மூவரையும் கைது செய்து, ரூ.1லட்சம் பணத்தை பறிமுதல் செய்தார். "சதுரங்க வேட்டை" என்ற தமிழ் திரைப்படத்தில் கோயில் கலசங்களை விற்பது போல் மோசடி செய்யும் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும் அதே பாணியில் நடந்துள்ள இந்த சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.