புதியம்புத்தூர் அருகே 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது!
புதியம்புத்தூரில் மறைவான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரைகைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதியம்புத்தூரில் மறைவான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரைகைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன், ஏட்டு கந்தசுப்பிரமணியன் ஆகியோர் புதியம்புத்தூர் பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் ஓட்டப்பிடாரம் சிங்கத்தாகுறிச்சியை சேர்ந்த முருகன் என்ற துரை என்பவர் தலா 40 கிலோ எடை கொண்ட 15 மூட்டைகளில் மொத்தம் 600 கிலோ ரேஷன் அரிசியை மறைவான இடத்தில் பதுக்கி வைத்து, கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியை சுற்றிவளைத்த போலீசார், முருகனை மடக்கி பிடித்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். எங்கிருந்து ரேஷன் அரிசியை அவர் கொண்டு வந்தார்? எங்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தார்? இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.