உரிமம் இல்லாமல் எத்தனால், மெத்தனால் விற்பனை: போலீசார் திடீர் சோதனை!!

தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனங்களில் உரிமம் இல்லாமல் எத்தனால், மெத்தனால் விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் எத்தனால், மெத்தனால் போன்ற வேதிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்ய எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். அதன்படி, கலால் உதவி ஆணையர் கல்யாண்குமார், மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கபீர்தாசன் ஆகியோர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, தனியார் நிறுவனத்தில் உள்ள இருப்பு பதிவுகள், கொள்முதல், விற்பனை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. எத்தனால், மெத்தனால் கையாளப்படும் முறை, சேமித்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், எத்தனால், மெத்தனால் ஆகியவற்றை எந்தவித உரிமமும் இன்றி வைத்து இருந்தாலோ, விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு அல்லது போலீஸ் கட்டுப்பாட்டுஅறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.