தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் : ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்காம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க அதிகபட்சமாக ரூ.5ஆயிரம் மானியத் தொகை பெறுவதற்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிர் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
2025-2026 ஆம் நிதியாண்டிற்காக வறுமைக் கோட்டிற்குக் கீழ் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5,000/- மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் (ம) சான்றுகள்: தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறப்பிடச் சான்று), வயது வரம்பு - 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும், பிறந்த தேதிக்கான சான்று, திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள். ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (வருமானச் சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும்).
எனவே. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி மாவட்ட www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மேற்காணும் ஆவண நகல்களுடன் இணைத்து தங்களது விண்ணப்பத்தினை 31.07.2025-க்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர். இதர விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி தொடர்பு எண். 0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.