கயத்தார் அருகே காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலம் கிடந்த வழக்கில் திடீர் திருப்பம்: கார் ஓட்டுநர் கைது

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்த கரிசல் குளம் விலக்கு அருகே மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதையடுத்து கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே கரிசல் குளம் விளக்கு அருகே உள்ள தனியார் நிலத்தில் தீக்காயங்களுடன் இறந்து கிடந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலத்தை போலீசார் இம்மாதம் 5ஆம் தேதி மீட்டனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இது குறித்து கயத்தாறு மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கும் மீட்கப்பட்ட சடலம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மனைவி காந்திமதி (71)என்பது அவர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்திருப்பதின் மூலம் தெரிய வந்தது. தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் காந்திமதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேல்பாண்டி மகன் கார் ஓட்டுநர் சண்முக பாண்டியனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்ததும் தெரிய வந்ததையடுத்து, போலீஸார் சண்முக பாண்டியனை பிடித்து விசாரித்ததில் அவர் காந்திமதியை காரில் அழைத்து வந்து அடித்து, மயங்கிய நிலையில் இருந்தவரை காட்டுக்குள் கொண்டு சென்று கொன்று தீ வைத்ததும் தெரிய வந்தது.
அதையடுத்து சண்முக பாண்டியனை (29) கைது செய்த போலீஸார், மூதாட்டியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.