தூத்துக்குடி: கயத்தாறு அருகே பைக் மீது லாரி மோதி கைக்குழந்தை உள்பட 3 பேர் காயம் : கிராம மக்கள் சாலைமறியல்!!

தூத்துக்குடி: கயத்தாறு அருகே பைக் மீது லாரி மோதி கைக்குழந்தை உள்பட 3 பேர் காயம் : கிராம மக்கள் சாலைமறியல்!!

கயத்தாறு அருகே பைக் மீது லாரி மோதி 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கல்குவாரி லாரிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் காலனி தெருைவச் சேர்ந்தவர் கற்பகராஜ். இவருடைய மனைவி அனிஷா (26). இவர்களுக்கு அதுலியாஸ்ரீ என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று காலையில் அனிஷா தனது தம்பி இளையராஜாவின் (25) மோட்டார் சைக்கிளில் குழந்தை அதுலியாஸ்ரீயுடன் சென்றார். 

ஆத்திகுளம்-மானங்காத்தான் சாலையில் சென்றபோது, அந்த வழியாக தனியார் கிரஷரில் இருந்து தார் கலவை ஏற்றி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் இளையராஜா, அனிஷா, குழந்தை அதுலியாஸ்ரீ ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையே ஆத்திகுளம் வழியாக தனியார் கிரஷர் லாரிகள், கல்குவாரி லாரிகள் அதிகளவில் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அவற்றை மாற்று வழியாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே கயத்தாறு தாசில்தார் சுந்தரராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி மற்றும் போலீசார், அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாாிகள் தெரிவித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.