தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே பழவண்டியை சேதப்படுத்திய மீன்கடைக்காரர் கைது..!
தூத்துக்குடியில் பழவண்டியை சேதப்படுத்தி வியாபாரியை தாக்கியதாக மீன் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த அருள் மாணிக்கம் மகன் மிக்கேல் ராஜ் (32). இவர் லோடு ஆட்டோவில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் இவர் முத்தையாபுரம் வடக்கு தெரு சந்திப்பு அருகே பழம் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அங்கு மீன் கடை வைத்திருந்த முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சங்கர்ராஜ் மகன் புகழேந்தி (25), இங்கு பழக்கடை வைக்க கூடாது என்று கூறியவாறு தகராறு செய்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்ததை தொடர்ந்து அவர் சென்று விட்டார். அன்று மாலையில் இரும்பு கம்பியுடன் வந்த புகழேந்தி, திடீரென பழவண்டியை அடித்து சேதப்படுத்தினார். இதை தடுக்க முயன்ற தொழிலாளி அசாருதீன் என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து புகழேந்தியை கைது செய்தனர்.