ஜூலை 26 இல் தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு: பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்!

தூத்துக்குடியில் ரூ. 381 கோடி மதிப்பில் சா்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி திறந்து வைக்கிறாா்.
தூத்துக்குடி விமான நிலையம் கடந்த 1992 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு அதே ஆண்டு ஏப். 13 ஆம் தேதி சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் இயக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் தற்போது இரு தனியாா் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை, பெங்களூருவுக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமான நிலையத்தை ரூ. 381 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1,350 மீ. விமான ஓடுதளம் 3,115 மீ. நீள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். சா்வதேச தரத்தில் விரிவாக்கப் பணிகள் முடிவுற்ற நிலையில் வருகிற ஜூலை 26 ஆம் தேதி விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைத்து நாட்டு மக்களுக்கு அா்ப்பணிக்கிறாா்.
பிரதமா் வருகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் இந்திய விமான நிலைய ஆணையத் தலைவா் ஸ்ரீ விபின்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், விமான நிலைய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.