ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த மூவர் மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தல்: மீட்க கோரி எம்.எல்.ஏ தலைமையில் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு!!

ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த மூவர் மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தல்: மீட்க கோரி எம்.எல்.ஏ தலைமையில் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு!!

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த மூவரை மீட்க கோரி ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ தலைமையில் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கலப்பைபெட்டி பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 40), நாரைகினறு பகுதியை சேர்ந்த பொன்னுதுரை (வயது 49), கொடியங்குளம் பகுதியை சேர்ந்த புதியவன் (வயது 51) ஆகியோர் சிலருடன் சேர்ந்து டவர் அமைக்கும் பணிக்காக சுமார் எட்டு மாதங்களுக்கு முன் மாலி நாடு சென்றிருந்தனர்.

அங்கு கடந்த எட்டு மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் மாலி நாட்டு நிர்வாகம், இவர்களை  தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இத்தகவலை அறிந்த குடும்பத்தினர் தங்கள் உறவினரை மீட்கக் கோரி ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகய்யா உடன் சேர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர்.

அந்த மனுவை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ சன்முகையா உறுதி

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களை விரைவில் மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசின் மூலம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக உறுதியளித்தார். அதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

பின்னர், கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து, அவர்களை பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.