தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை வாய்ப்பு : மீனவர்கள், தாழ்வான பகுதி மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை வாய்ப்பு : மீனவர்கள், தாழ்வான பகுதி மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 11 மற்றும் 12ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல மையத்தால் 11.03.2025 மற்றும் 12.03.2025 ஆகிய நாட்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

எனவே, தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம் பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

மேலும், மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை உடனுக்குடன் மேற்கொள்ள அனைத்து நிலை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.