தூத்துக்குடியில் மருத்துவா் இல்லாததால் தாய், சேய் மரணம்? சுகாதாரத்துறை விளக்கம்..!

தூத்துக்குடியில் மருத்துவா் இல்லாததால் தாய், சேய் மரணம்? சுகாதாரத்துறை விளக்கம்..!

புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் இல்லாத காரணத்தினால் தாயும் சேயும் இறந்துள்ளனா் என்பது உண்மைக்கு புறம்பான செய்தி என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பிரசவத்திற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட இளம்பெண் வயிற்றில் குழந்தையுடன் உயிரிழந்ததையடுத்து, அப்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு பிரசவம் பாா்க்க மருத்துவா்கள் இல்லாத நிலையில் 2 செவிலியா்கள் மட்டுமே சிகிச்சை அளித்ததாகவும், இதனால், தாய்-சேயின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் தாய், சேய் மரணம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலா் யாழினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜாகிரா 108 ஆம்புலன்ஸ் மூலம் சனிக்கிழமை காலை 10.05 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது தாய் மற்றும் சேயின் நாடித்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் இல்லை என கண்டறியப்பட்டது.

தாய், சேய் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய உடல்கூறாய்வு பரிசோதனை, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்டு மருத்துவ காரணங்கள் கூா்ந்தாய்வு செய்யப்பட உள்ளது. புதுக்கோட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 5 மருத்துவா் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. எந்த மருத்துவா் பணியிடமும் காலியாக இல்லை. எனவே புதுக்கோட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் இல்லாத காரணத்தினால் தாயும் சேயும் இறந்துள்ளனா் என்பதும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என அவா் தெரிவித்துள்ளாா்.