தூத்துக்குடி-மும்பைக்கு புதிய ரயில் எப்போது? கனிமொழி எம்பி கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதில்!

தூத்துக்குடி-மும்பைக்கு புதிய ரயில் எப்போது? கனிமொழி எம்பி கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதில்!

தூத்துக்குடிக்கு ரயில் இணைப்பை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? என்று மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.  

திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இன்று எழுத்துபூர்வமான கேள்விகளை ரயில்வே அமைச்சரிடம் எழுப்பினார்.

”தூத்துக்குடிக்கும் மும்பைக்கும் இடையே மேம்படுத்தப்பட்ட ரயில்வே இணைப்புக்கான முக்கியத்துவம் வாய்ந்த தேவை இருப்பதை மத்திய அரசு அறிந்திருக்கிறதா… இதன் அடிப்படையில் லோக்மான்ய திலக் எக்ஸ்பிரசை (ரயில் எண். 11043/11044) தூத்துக்குடிக்கு நீட்டிப்பதன் மூலமோ அல்லது புதிய நேரடி ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலமோ இத்தேவையை நிறைவேற்ற ஒன்றிய அரசு முனைந்திருக்கிறதா?

இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுவதற்கு கால நிர்ணயம் ஏதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? தூத்துக்குடிக்கு ரயில் இணைப்பை மேம்படுத்த வேறு ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” ஆகிய கேள்விகளை கனிமொழி கருணாநிதி எம்பி எழுப்பினார்.

இக்கேள்விகளுக்கு மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், "19567/19568 மும்பை - மும்பை - தூத்துக்குடி பிரிவில் (a) முதல் (d) வரை தற்போது ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் சேவை வழங்கப்படுகிறது. தூத்துக்குடி பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வே 19.07.2024 முதல் 16765/16766 மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (வாரம் இருமுறை) அறிமுகப்படுத்தியுள்ளது. 

16791/16792 திருநெல்வேலி-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் சேவையை 15.08.2024 முதல் தூத்துக்குடி வரை நீட்டித்துள்ளது. இது தவிர போக்குவரத்து தேவைகள், செயல்பாட்டு சாத்தியக் கூறுகள், திட்டத்துக்கு தேவையான வளங்கள் கிடைக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, புதிய ரயில்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் ரயில் சேவைகளை நீட்டித்தல் ஆகியவை தொடர்ந்து நடைபெறும்” என்று ரயில்வே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.