சாத்தான்குளம் அருகே இருதரப்பினர் மோதலில் காயம் அடைந்த வாலிபர் உயிரிழப்பு - 3பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

சாத்தான்குளம் அருகே இருதரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் காயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்தவர் சூரியராஜ் மகன் ரெக்சன் (27) இவருக்கும் சந்திராயபுரத்தை சேர்ந்த ஏசுராஜா என்பவருக்கும் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்ததாம். இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி கைபேசியில் பேசிய போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உடன் ரெக்சன் தரப்பில், ஏசு ராஜாவை முதலுருக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஏசு ராஜா, பழனியப்ப புரத்தை சேர்ந்த முருகன் மகன் ஆனந்த் (25 ) உள்ளிட்ட நான்கு பேர்கள் இரவு முதலூருக்கு வந்துள்ளனர். அப்போது முதலூரில் ரெக்சன் உள்ளிட்ட மூன்று பேர்கள் நின்று உள்ளனர். இருதரப்பினரும் மது அருந்திய போதையில் இருந்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி உள்ளனர்.
இதில் ஆனந்திற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடன் காயமடைந்த ஆனந்த், இங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று நெல்லை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரெக்சன் உள்ளிட்ட 3 பேர்களை தேடி வருகின்றனர்.