தூத்துக்குடியில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி : வாகன ஓட்டிகள் கடும் அவதி

தூத்துக்குடியில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி : வாகன ஓட்டிகள் கடும் அவதி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சியில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. மேலும் சாலைகளில் கார்களை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்து அபாயம் மற்றும் அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) செல்வதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது.

காலை, மாலை பள்ளி நேரங்களில் வாகனப் பெருக்கத்தால் பள்ளிகள் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறுகிய சாலைகளில் கார்களை நிறுத்துவதால் இந்நிலை ஏற்படுகிறது. பள்ளி அருகே சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதை தடை செய்து போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. 

சாலையோரங்களில் கட்டிடக் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளதும் போக்குவரத்து நெரிசலுக்கு மற்றொரு காரணமாக உள்ளது. எனவே, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க மாநகராட்சி மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.