தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: மேலும் 3பேர் படுகாயம்!

தூத்துக்குடியில் வெல்டிங் பணி செய்து கொண்டிருந்தபோது உயர் அழுத்த மின்வயர் மீது ஏணி உரசியதில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார். மேலும் 3பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சுபா நகரைச் சேர்ந்தவர் கலைமுத்து மக்ன மாரிமுத்து (41) இவர் துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் தனியார் குடோனில் வெல்டிங் காண்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். இவரிடம் ஆத்தூர் முக்காணி உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீரமணி மகன் முத்து சிவா (21), முத்தையாபுரம் சுபா நகர் காளிமுத்து மகன் கருப்பசாமி (39), முக்காணி திரவியம் மகன் கார்த்திக் (23), வடக்கு ஆத்தூர் மாரியப்பன் மகன் சந்தனகுமார் (19) ஆகிய 4 பேரும் வேலை செய்து வருகிறார்கள்
நேற்று 4 பேரும் குடோனில் கூலிங் சீட் மாட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 20 அடி உயர இரும்பு குதிரை ஏணியை 4 பேரும் சேர்ந்து நகர்த்தி வரும்போது குடோன் அருகில் சென்ற உயர் அழுத்த மின்வயர் ஏணி மீது உரசியது. இதில், உடலில் மின்சாரம் தாக்கியதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடிஅரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர், முத்து சிவா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் 3பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.