திருச்செந்தூா் அருகே ஒருவர் அடித்து கொலை : 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை!!

திருச்செந்தூர் அருகே வட்டன்விளை காட்டு பகுதியில் பனைத்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை காட்டு பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. அதன் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம், உடல், கை, கால்களில் ரத்தக் காயங்களுடன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காயங்களுடன் பிணமாக கிடந்தவர் பனைத்தொழிலாளி என்பது தெரியவந்தது. அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், வெளியூரை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.