தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை : தலைமறைவானவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை : தலைமறைவானவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

கோவில்பட்டியில் கை குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் சுட்டு பிடித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பகுதியில் கை குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வந்த இளம் பெண்ணின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி புகுந்து போதையில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாக பாதிக்கப்பட்ட பெண் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை நடத்தினார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு தடயவியல் மற்றும் கைரேகை பிரிவு அதிகாரிகள் வருகை தந்து தடயங்களை கைப்பற்றினார். மேலும் மோப்பநாய் சுனோ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக வீரவாஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம், மாரியப்பன் ஆகிய இரு இளைஞர்களை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் வீரவாஞ்சி நகர் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த அவர்களை பிடிக்கச் சென்றபோது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்ததில் மாரியப்பன் கீழே விழுந்து கை கால்களில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து மாரியப்பனை சுற்றி வளைத்த போலீசார் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. 

மேலும் வழக்கில் தொடர்புடைய மற்றொருவரான மாரி செல்வத்தை போலீசார் தேடி வந்தநிலையில், தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்ய முயன்ற போது காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் பொன்ராம் ஆகியோரை  அரிவாளால் தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் மாரி செல்வத்தை இடது காலில் சுட்டு பிடித்த போலீசார் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு. அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் பாலியல் புகாரில் சிக்கிய இருவரில் ஒருவர் தப்பிக்க முயன்று காலில் அடிபட்டு மாவு கட்டுடனும், மற்றொருவர் துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்டும் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.