தூத்துக்குடியில் மாயமாகும் சிறுமிகள், பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
தூத்துக்குடியில் மாயமாகும் சிறுமிகள், பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன சிறுமிகள், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, தூத்துக்குடியில் காணாமல் போன பெண்கள், சிறுமிகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் தூத்துக்குடியில் 2017-ம் ஆண்டு 75 சிறுமிகள், 2018-ம் ஆண்டு 90 சிறுமிகள், 2019-ம் ஆண்டு 88 சிறுமிகள் காணாமல் போனதாகவும், இந்த எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 112 ஆகவும், 2021-ம் ஆண்டு 144 ஆகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தூத்துக்குடியில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கையில் 2017-ல் 191 பேரும், 2018-ல் 195 பேரும், 2019-ல் 167 பேரும், 2020-ல் 224 பேரும், 2021-ல் 369 பேரும் காணாமல் போனதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் கடத்தல் தடுப்புப் பிரிவுகள் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.